மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், தனது சொந்த அத்தையை 15 வயது சிறுவன் ஒருவன் மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த விதம் போலீசாரையே அதிர வைத்துள்ளது. 42 வயதான சகுந்தலா சின்ஹே என்ற பெண்மணி, தனது கைவரிசையை மறைக்க முயன்ற அந்தச் சிறுவனின் கோபத்திற்குப் பலியாகியுள்ளார். பணப் பரிமாற்றம் தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த கசப்புணர்வே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத அந்தச் சிறுவன், வீட்டிலிருந்த மூங்கில் தடியை எடுத்து சகுந்தலாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளான். இதில் நிலைகுலைந்து விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைக்க திட்டமிட்ட அந்தச் சிறுவன், தரையில் இருந்த ரத்தக் கறைகளைத் துடைத்துவிட்டு, சடலத்தை அங்கிருந்த ‘சோபா-கம்-பெட்’ பெட்டிக்குள் திணித்து மூடியுள்ளான். எவ்விதச் சலனமும் இன்றி அந்த வீட்டிலேயே அவன் நடமாடியது விசாரணையில் தெரியவந்தது.
சில நாட்களாக சகுந்தலாவைக் காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்த நிலையில், வீட்டிற்குள் இருந்து வீசிய சகிக்க முடியாத துர்நாற்றம் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. பின்னர், போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, சோபாவைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் சகுந்தலாவின் சடலம் மீட்கப்பட்டது. இதற்கிடையே, தலைமறைவாக இருந்த அந்தச் சிறுவனைத் தேடிப் பிடித்த காவல்துறையினர், அவன் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தச் சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான்.



