ஒரு வீட்டின் ஆரோக்கியமும், அந்த வீட்டை பராமரிப்பவர்களின் நேர்த்தியும் அவர்கள் வீட்டு குளியலறை எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. பல் துலக்குவது முதல் குளிப்பது வரை நாள் முழுவதும் பலமுறை பயன்படுத்தப்படும் குளியலறையை சரியாக பராமரிக்க தவறினால், அது பாக்டீரியாக்களின் கூடாரமாக மாறிவிடும்.
இதனால் ஏற்படும் துர்நாற்றம் வீட்டிற்கு வருபவர்களிடையே நமது நற்பெயரைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். விலையுயர்ந்த ரசாயனப் பொருட்களைக் காட்டிலும், நம்மிடம் உள்ள சில எளிய பொருட்களை கொண்டே குளியலறையைப் பளிச்சென்று மாற்ற முடியும்.
குளியலறை குழாய்கள் அல்லது தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் இருந்து துர்நாற்றம் வீசினால், அதற்கு அங்கு தேங்கியுள்ள அழுக்குகளே முக்கிய காரணமாகும். இதற்குத் தீர்வாக, நன்கு கொதிக்க வைக்கப்பட்ட வெந்நீரை வடிகால் துவாரங்களில் ஊற்றலாம். இது தேங்கியுள்ள அழுக்குகளைக் கரைப்பதோடு கிருமிகளையும் அழிக்கும்.
கூடுதல் பலன் கிடைக்க, வெந்நீருடன் சிறிது வெள்ளை வினிகரை சேர்த்துக் கொள்வது நன்று. இது குழாய்களில் படிந்துள்ள பிசுபிசுப்பை நீக்கி, சுத்தமான வாசனையை தரும். பெரும்பாலும் முடி மற்றும் சோப்பு கழிவுகள் நீர் வெளியேறுவதை தடுத்து துர்நாற்றத்தை உருவாக்கும் என்பதால், அவ்வப்போது வடிகால் பகுதியை சுத்தம் செய்வது அவசியம்.
அதேபோல், கழிப்பறையில் இருந்து வீசும் நெடியை கட்டுப்படுத்த ஒரு சுவாரசியமான வழிமுறை உள்ளது. வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் காலாவதியான டால்கம் பவுடர் இருந்தால், அதனை இரவு நேரத்தில் கழிப்பறையில் தூவி விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கமான கிளீனர்களைக் கொண்டு தேய்க்கும்போது, கறைகள் எளிதில் நீங்குவதோடு நறுமணமும் நீடிக்கும். மேலும், பலரும் கவனிக்கத் தவறும் இடம் ‘ஃபிளஷ் டேங்க்’. இதனுள் பாசி அல்லது அழுக்குகள் சேர்வதாலும் துர்நாற்றம் ஏற்படலாம். எனவே, குறைந்தது 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபிளஷ் டேங்கை திறந்து சுத்தம் செய்வது ஒட்டுமொத்த குளியலறையையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.



