கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,000 என்ற வரலாற்று சாதனையைத் தொட்டபோது, நகை வாங்குவது என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே தெரிந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் பிறந்ததிலிருந்தே தங்கம் விலை ஒரு சரிவுப் பாதையை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளது. இன்று (பிப்ரவரி 19) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 முதல் ரூ.1,21,000 வரை விற்பனையாகிறது. ஜனவரி மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 முதல் 15 சதவீத வீழ்ச்சியாகும். இந்தத் திடீர் சரிவு நகைப்பிரியர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களே இந்த விலை சரிவுக்கு அச்சாணியாக கருதப்படுகின்றன. ப்ளூம்பெர்க் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா அமெரிக்காவுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தனது எரிசக்தி வர்த்தகத்தை (எண்ணெய் மற்றும் எரிவாயு) மீண்டும் அமெரிக்க டாலர் மூலம் மேற்கொள்ள ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. டாலர் வலுப்பெறும்போது, அதற்கு மாற்றாகக் கருதப்படும் பாதுகாப்பான முதலீடான தங்கம் மீதான மோகம் குறைவது உலகளாவிய சந்தை விதியாகும்.
ரஷ்யா தனது பொருளாதாரத்தை மீட்க, தன்னிடம் உள்ள பெரும் தங்க இருப்புகளை விற்று டாலராக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ (BRICS) நாடுகள் டாலருக்கு எதிராகச் சேமித்து வைத்திருந்த தங்கத்தை சந்தைக்குக் கொண்டு வந்தால், தங்கத்தின் வரத்து அதிகரித்து விலை மேலும் சரியக்கூடும். புவிசார் அரசியல் சூழல் அமைதி நிலையை எட்டினால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து பங்குச்சந்தை மற்றும் இதர வர்த்தகங்களில் கவனம் செலுத்துவார்கள். இது தங்கத்தின் தேவையை வெகுவாக குறைக்கும்.
தற்போதைய சூழலை கூர்ந்து கவனிக்கும் பொருளாதார நிபுணர்கள், ஒரு அதிரடி கணிப்பை முன்வைக்கின்றனர். ஜெனீவா பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்து, உக்ரைன்-ரஷ்யா போர் முழுமையாக நின்றால், 2027-ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.80,000-க்கு கீழ் செல்லவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய சந்தை சூழலில் முதலீட்டாளர்கள் ‘காத்திருப்போம் கவனிப்போம்’ என்ற நிலையிலேயே உள்ளனர்.
ஜெனீவா பேச்சுவார்த்தையின் இறுதி முடிவுகள் மற்றும் அமெரிக்க டாலரின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே தங்கம் விலை சரிவு தொடருமா அல்லது மீண்டும் உச்சத்தைத் தொடுமா என்பது உறுதியாகும். எது எப்படியிருந்தாலும், கடந்த சில வாரங்களாக காணப்பட்ட விலை உயர்வு வேகம் தணிந்திருப்பது நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை தந்துள்ளதை மறுக்க முடியாது.
Read More : மாசி மாத வெள்ளிக்கிழமையின் சிறப்பு..!! வீட்டில் செல்வம் அதிகரிக்க மகாலட்சுமியை இப்படி வழிபடுங்க..!!



