சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியில் கணவனை இழந்த நிலையில், விஜயலட்சுமி என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகளான சண்முகப்பிரியா (22), கல்வியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
நாமக்கல் கல்லூரியில் படிக்கும் போது சண்முகப்பிரியாவுக்கும் கௌதம் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், நாளடைவில் கௌதமின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததால், சண்முகப்பிரியா அந்த உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதனை ஏற்க முடியாத கௌதம், சண்முகப்பிரியாவிற்கு தொடர்ந்து ‘காதல் டார்ச்சர்’ கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சண்முகப்பிரியாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்ய முயன்றபோது, கௌதமின் வக்கிரம் எல்லை மீறியுள்ளது. காதலிக்கும் போது எடுத்த தனிப்பட்ட புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்து, அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார் கௌதம். திருமணத்தைத் தடுத்ததோடு இல்லாமல், “புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி விடுவேன்” என சண்முகப்பிரியாவை மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த சண்முகப்பிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர், சண்முகப்பிரியாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் சண்முகப்பிரியாவின் அறையை சோதனையிட்டபோது, அவர் எழுதிய நான்கு பக்கத் தற்கொலை கடிதம் சிக்கியுள்ளது. அதில், “நான் எடுப்பது கோழைத்தனமான முடிவுதான், ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த முடிவுக்குக் காரணம் கௌதம் தான், அவனை சும்மா விடாதீர்கள். நான் நல்ல முறையில் வாழ ஆசைப்பட்டேன், ஆனால் அவன் விடமாட்டான். மேலும், ஜாதகத்தை பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்தாமல் இருந்திருந்தால் நான் உயிரோடு இருந்திருப்பேன்” என வேதனையுடனும், ஆதங்கத்துடனும் எழுதியிருந்தார்.
இந்த கடிதம் சண்முகப்பிரியாவால் தான் எழுதப்பட்டதா என்பதை உறுதி செய்யக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தனியார் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனின் மிரட்டலால் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இனி நகைக்கடன் தள்ளுபடி கிடையாது..? கூட்டுறவு வங்கிகள் திவாலாகும் அபாயம்..? வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..!!



