தமிழக அரசியல் களம் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியதுதான் இப்போதைய ‘ஹாட் டாப்பிக்’. இந்தச் சந்திப்பின் போது, முதலமைச்சர் ஸ்டாலினின் கடந்த கால ஆட்சிச் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டியதுடன், வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் திமுகவே ஆட்சியமைக்கும் என்று ஓபிஎஸ் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணையப் போகிறாரா அல்லது தனது ஆதரவாளர்களுடன் திமுகவிலேயே ஐக்கியமாகப் போகிறாரா என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் நிலவும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓபிஎஸ்-ஸின் இந்த நகர்வு தனது அரசியல் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கருத்து, இந்த யூகங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இது குறித்துப் பேசிய வைகோ, “ஓ.பன்னீர்செல்வம் எதையும் மிக ஆழமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததன் மூலமே, அவர் நேற்று திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார் என்பதுதான் உண்மை” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். வைகோவின் இந்த வெளிப்படையான பேச்சு, திமுக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதற்கான கதவுகள் திறந்திருப்பதை உறுதி செய்வது போல அமைந்துள்ளது. வைகோவின் இந்தக் கருத்துக்கு ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



