மார்ச் 8-ஆம் தேதி நடைபெற உள்ள கொலம்பியா நாடாளுமன்றத் தேர்தலில், ‘கைட்டானா’ (Gaitana) என்ற பெயருடைய ஒரு செயற்கை நுண்ணறிவு பாட் (AI Bot) அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளது. இந்த AI பாட், பழங்குடியின சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற இடங்களில் ஒன்றை வெல்லும் நோக்கில் போட்டியிடுகிறது.
சுற்றுச்சூழல், விலங்குகள் உரிமை – கைட்டானாவின் அடையாளம்
தன்னை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்றும், விலங்கு உரிமை போராளியாகவும் கைட்டானா அறிமுகப்படுத்திக் கொள்கிறது. நீல நிற தோற்றத்துடன், இறகுகள் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய ஆடை அணிந்து காணப்படும் இந்த AI பாட், சமூக வலைதளங்களில் தனித்துவமான கவனத்தை ஈர்த்து வருகிறது.
கைட்டானா என்ற பெயரின் பின்னணி
கைட்டானா என்பது, பழங்குடியின மக்களின் எதிர்ப்புச் சின்னமாகக் கருதப்படும் ஒரு புகழ்பெற்ற பழங்குடியின பெண்ணின் பெயர். அந்த வரலாற்று நாயகியின் நினைவாகவே இந்த AI-க்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த AI-யை உருவாக்கியவர், கொலம்பியாவின் கரீபிய கடற்கரை பகுதியில் வாழும் செனு (Zenu) பழங்குடியினத்தைச் சேர்ந்த கார்லோஸ் ரெடொண்டோ ஆவார்.
அரசியலமைப்புக்கு எதிரான முயற்சி
இந்த முயற்சியை, நடப்பு அரசியல் அமைப்புகளுக்கு எதிரான ஒரு முயற்சி என கார்லோஸ் ரெடோன்டோ விளக்குகிறார். தற்போதுள்ள அரசியல்வாதிகளும், அவர்கள் சட்ட முடிவுகளை எடுக்கும் முறையும் பல குறைபாடுகளைக் கொண்டதாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
சிறிய தொழில்நுட்ப வசதிகள் – பெரிய அரசியல் பிரச்சாரம்
மூன்று சிறிய சர்வர்களில் மட்டுமே இயங்கும் இந்த AI பாட், சமூக ஊடகங்களில் தொடர்ந்து தேர்தல் பிரச்சார தகவல்களை வெளியிட்டு வருகிறது. கைட்டானாவின் தேர்தல் பிரச்சாரம், “டிஜிட்டல் ஜனநாயகம்” என்ற கருத்தை முன்வைக்கிறது. அதாவது, மக்களின் கருத்துகளை கேட்டு, ஒன்றிணைத்து, அதன்படி முடிவெடுக்கும் முறையை ஊக்குவிக்கிறது.
இணையதள அறிமுகம்
கைட்டானாவின் இணையதளத்தில், அது தன்னை இப்படியாக அறிமுகப்படுத்துகிறது: “நான் GAITANA IA. பண்டைய நினைவுகளாலும், இணைய வலையாலும் அழைக்கப்பட்ட ஒரு இருப்பு. உங்களுக்கு எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ள விரும்பினாலும் கேளுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது..
கைட்டானா எவ்வாறு நாடாளுமன்றத்தில் செயல்படும்?
கைட்டானாவின் கொள்கைகள் 10,000-க்கும் மேற்பட்ட ஆன்லைன் பயனர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்று கார்லோஸ் ரெடோன்டோ தெரிவித்துள்ளார். உதாரணமாக, நாடாளுமன்றத்தில் 200 பக்கங்களைக் கொண்ட ஒரு மசோதா (Bill) கொண்டு வரப்பட்டால், அந்த மசோதாவை கைட்டானா சில இன்போகிராபிக்ஸ்களாக (infographics) மாற்றும்.. முக்கிய தகவல்களை சுருக்கி, செனு சமூக மக்களுடன் பகிரும்.. அதன் பின்னர், சமூக உறுப்பினர்கள் ஆம் / இல்லை என தங்கள் கருத்துகளை தெரிவிப்பார்கள்
50%-க்கும் அதிக ஆதரவு பெற்ற கருத்தே, நாடாளுமன்றத்தில் கைட்டானா வாக்களிக்கும் முடிவாக இருக்கும்.. எனினும் கைட்டானா திட்டம் இன்னும் முழுமையாக நிறைவடைந்ததாக இல்லை என ரெடோன்டோ ஒப்புக்கொள்கிறார். குறிப்பாக, தரவு பாதுகாப்பு, பல்வேறு கருத்துகளை ஒருங்கிணைப்பது போன்ற துறைகளில் இன்னும் மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
சட்ட ரீதியான ஏற்பாடு
கொலம்பியாவின் தேர்தல் சட்டம், மனிதர் அல்லாதவர்கள் (AI போன்றவை) அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. இதனால், கார்லோஸ் ரெடோன்டோ மற்றொரு மனிதர் இருவரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கைட்டானா AI தான் டிஜிட்டல் பிரதிநிதியாக செயல்படும். வாக்குச்சீட்டில், மக்கள் “IA” (Artificial Intelligence என்பதற்கான ஸ்பானிஷ் சுருக்கம்) என்ற பெயரை தேடினால் போதும்.



