அதிமுக கூட்டணிக்குத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது ஆதரவை உறுதி அளித்துள்ளதாக தீயாய் பரவிய செய்திகளுக்கு, அந்த அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் நேற்று நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, வணிகர்கள் இந்த முறை இரட்டை இலைக்கே ஆதரவு எனப் பரவலான பேச்சு எழுந்தது. இந்நிலையில், அந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து விக்கிரமராஜா விரிவான விளக்கமளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்துப் பேசிய விக்கிரமராஜா, “இது முற்றிலும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே; இதில் அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை” என தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என குறிப்பிட்ட அவர், ஊடகங்களில் வெளியாவது போல அதிமுகவுக்கான ஆதரவு நிலைப்பாடு குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வணிகர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் நீண்டகால கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் அவர் வழங்கினார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சிக் காலங்களில் வணிகர்களின் கோரிக்கைகளில் சுமார் 70 சதவீதப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மீதமுள்ள 30 சதவீதக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



