தமிழக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பாகவும், இக்கட்டான சூழலில் கைக்கொடுக்கும் உற்ற நண்பனாகவும் என்றும் திகழ்வது தங்க நகைகள் மட்டுமே. அவசர தேவைக்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லாமல், வீட்டில் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து உடனடியாக நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது புதிய தொழில் தொடங்குவது என எந்தவொரு நிதி நெருக்கடிக்கும் நகைக்கடன் ஒரு எளிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
நகைக்கடன்களைப் பொறுத்தவரை, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும். தனியார் நிதி நிறுவனங்களில் வட்டி சற்று கூடுதலாக இருந்தாலும், அவர்கள் வழங்கும் கடன் தொகை (LTV) வங்கிகளை விடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தங்கத்தின் சந்தை விலை அடிக்கடி மாறினாலும், நீங்கள் கடனைப் பெறும்போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், கடனைத் திருப்பிச் செலுத்தி நகையை மீட்கும் வரை மாறாமல் அப்படியே இருக்கும் என்பது ஒரு கூடுதல் பிளஸ் பாயிண்ட். தனிநபர் கடன்களுடன் (Personal Loan) ஒப்பிடுகையில் நகைக்கடன்களுக்கான வட்டி மிகக் குறைவு என்பதால், குறுகிய கால தேவைகளுக்கு இதுவே சிறந்த தேர்வாகும்.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளும் மதிப்பீட்டு முறையும் :
நகைக்கடன் வழங்குவதில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில கடுமையான விதிகளைப் பின்பற்றுகிறது. பொதுவாக, நகையின் மதிப்பில் 75% முதல் 80% வரை மட்டுமே கடனாக வழங்கப்படும். உதாரணமாக, உங்கள் நகையின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் எனில், உங்களுக்குச் சுமார் 75,000 ரூபாய் வரை கைக்குக் கிடைக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், நகையில் உள்ள கற்கள், மணிகள் அல்லது அழுக்குகளின் எடை கழிக்கப்பட்டு, சுத்தமான தங்கத்தின் எடைக்கு மட்டுமே பணம் வழங்கப்படும்.
தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் (சுமார் ஒரு கிராம் ரூ.14,750), பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் ஒரு கிராமுக்கு ரூ.11,000 வரை கடன் வழங்கப்படுகிறது. எனினும், 50 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு வருமான ஆதாரம் மற்றும் பின்னணி குறித்த விசாரணைகள் நடத்தப்படும்.
வங்கியில் நகையை அடகு வைத்த பிறகு, அதன் பாதுகாப்புக்கு அந்த வங்கியே முழுப் பொறுப்பு. நகையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அதற்கு வங்கி நஷ்டஈடு வழங்க வேண்டும். மிக முக்கியமாக, பலருக்கும் தெரியாத ஒரு ‘ஆர்பிஐ’ விதி உள்ளது. நீங்கள் கடனை முழுமையாகச் செலுத்திய பிறகு, வங்கி உங்கள் நகையைத் திருப்பித் தருவதில் தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 வீதம் உங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், 18 முதல் 24 காரட் வரையிலான ஆபரணங்கள் மற்றும் 50 கிராம் வரையிலான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும்; தங்கக் கட்டிகள் அல்லது பிஸ்கட்டுகளுக்குக் கடன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.



