பாதுகாப்பான முதலீடு மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன. மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களின் சேமிப்பை அஞ்சலகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் ‘மாதாந்திர வருமான திட்டம்’ (Post Office Monthly Income Scheme – MIS) தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மற்றும் இல்லத்தரசிகளின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை 5 ஆண்டுகளுக்கு மொத்தமாக டெபாசிட் செய்ய வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட வட்டித் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 வட்டி வழங்கப்படுகிறது, இது பல முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டியை விடக் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டுக் கணக்கின் கூடுதல் நன்மைகள்:
இந்தத் திட்டத்தில் தனிநபராக மட்டுமன்றி, தம்பதியினர் இணைந்து ‘கூட்டுக் கணக்கு’ (Joint Account) மூலமாகவும் முதலீடு செய்யலாம். ஒரு கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக 3 பேர் வரை இணைய முடியும். இதில் தனிநபர் கணக்கிற்கான முதலீட்டு வரம்பை விட, கூட்டுக் கணக்கிற்கான வரம்பு அதிகம் என்பதால் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
உதாரணமாக, ஒரு தம்பதி இணைந்து ரூ. 4 லட்சம் முதலீடு செய்தால், அவர்களுக்கு மாதந்தோறும் சுமார் ரூ. 2,467 வட்டி வருமானமாகக் கிடைக்கும். ஐந்தாண்டு கால முதிர்வுக்குப் பிறகு, நீங்கள் முதலீடு செய்த அசல் தொகை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
அதிகபட்ச வருமானம் பெறுவது எப்படி..?
கூட்டுக் கணக்கைப் பொறுத்தவரை முதலீட்டு வரம்பு ரூ. 15 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் இந்த அதிகபட்ச தொகையான ரூ. 15 லட்சத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில், அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான வருமானமாக ரூ. 9,250 வரை கிடைக்கும். அதேபோல், ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 5,550 வருமானம் ஈட்ட முடியும். பங்குச்சந்தை அபாயங்கள் இன்றி, மாதாந்திர வீட்டுச் செலவுகளுக்குத் தேவையான ஒரு நிலையான தொகையை ஈட்ட விரும்புவோருக்கு இந்த அஞ்சலகத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும்.



