ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 23 வயது இளம்பெண் ஒருவர், அடுத்தடுத்து நேர்ந்த கொடூரங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற காதலனே அப்பெண்ணை சீரழித்த நிலையில், உதவிக்கு வந்த மற்றொரு நபரால் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை நம்பி, அந்த இளம்பெண் ஒரு கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு வந்த காதலன் அந்தப் பெண்ணை ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், பேருந்து நிலையத்தில் அந்தப் பெண்ணை தனியாக தவிக்க விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இரவில் பேருந்து நிலையத்தில் திகைத்து நின்றிருந்த அந்தப் பெண்ணுக்கு உதவுவதாக கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார். பாரதீப் நகரில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த நபர், அங்கு அந்தப் பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது கொடூர செயல் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், அந்தப் பெண்ணை 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்துள்ளார்.
மறுநாள் காலை சடலமாக கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் குறித்து, அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த காதலன் மற்றும் கொலை செய்த மர்ம நபர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



