ஆரக்கிள் (Oracle) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் சுமார் 20,000 முதல் 30,000 வரை பணியாளர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) அடித்தளத்தை உருவாக்குவதற்கான மிகப்பெரிய முதலீடுகளால் செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த பணிநீக்கங்கள் இந்த மாதத்திலேயே தொடங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும், நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர்கள் மற்றும் கிளவுட் (cloud) கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக பில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் நிலையில், நிறுவனத்தின் நிதிநிலையை சீராக வைத்திருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது..
முன்னதாக, Oracle நிறுவனம் தனது ஒழுங்குமுறை அறிக்கையில், இந்த மறுசீரமைப்பு திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகலாம் என்று தெரிவித்திருந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை மற்றும் அமைப்பு மாற்ற செலவுகள் காரணமாக இந்த அளவு செலவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
2025 மே மாத நிலவரப்படி, Oracle நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,62,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இந்த நடவடிக்கையால் நிறுவனத்திற்கு சுமார் 10 பில்லியன் டாலர் வரை பணத்தை சேமிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பல பணிகளை தானியக்கமாக (automation) செய்யத் தொடங்கியுள்ளதால், சில வேலைப்பதவிகள் தேவையற்றதாக மாறக்கூடும் என்று நிறுவனம் கருதுகிறது.
AI விரிவாக்கம் – நிதி அழுத்தம் அதிகரிப்பு
நிறுவனம் தற்போது எதிர்கொள்ளும் நிதி அழுத்தத்தின் முக்கிய காரணமாக அதன் AI மற்றும் கிளவுட் சேவைகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டம் கருதப்படுகிறது. லாரி எல்லிசன் தலைமையில், Oracle நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கிளவுட் துறையில் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக முயற்சி செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய பகுதியாக, Oracle மற்றும் OpenAI இணைந்து செயல்படும் கூட்டாண்மை உள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் 156 பில்லியன் டாலர் வரை முதலீடு தேவைப்படலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.. மேலும் செயற்கை நுண்ணறிவு கணக்கீடுகளுக்காக சுமார் 30 லட்சம் GPU சிப்கள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விரிவாக்கத்திற்கான நிதியை திரட்டுவதற்காக Oracle நிறுவனம் பெரிய அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 58 பில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளது. அதில் டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சின் மாநிலங்களில் டேட்டா சென்டர் திட்டங்களுக்கு 38 பில்லியன் டாலர், மேலும் நியூ மெக்சிகோவில் அமைக்கப்படும் பெரிய வளாகத்திற்காக 20 பில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கடன்களால் தற்போது Oracle நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



