சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.. பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையிலான இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர்கள் நியாயமான முறையிலும் சரியான நேரத்திலும் கிடைக்க உறுதி செய்ய முடியும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது..
சில நுகர்வோர் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே சிலிண்டர்களை முன்பதிவு செய்து வந்ததால், சில பகுதிகளில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். “வீட்டு நுகர்வோருக்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும்,” என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள உலகளாவிய பதற்றநிலையால் எல்பிஜி தேவைகள் அதிகரித்து வருவதால், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வர்த்தக பயன்பாட்டை விட வீட்டு பயன்பாட்டுக்கான இணைப்புகளுக்கு அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.
கூடுதலான கேஸ் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகளும் அடங்கும். இந்த நடவடிக்கைகள் எல்பிஜி விநியோகத்தை சீராக வைத்திருக்கவும், மக்கள் பதற்றத்தால் அதிகமாக வாங்குவதைத் தடுப்பதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
மேலும், உணவகங்கள், வாகனங்கள் மற்றும் பிற துறைகளுக்கான எல்பிஜி தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு அவர்களின் தேவைகளை ஆய்வு செய்து, தேவையான அளவு எல்பிஜியை வழங்குவதற்கான வழிகளை பரிசீலிக்கும்.
மேலும், விமான எரிபொருளான Aviation Turbine Fuel (ATF) பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. இந்தியா ATF-ஐ உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அதை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் உள்ளது. எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக ஹார்முஸ் நீரிணை வழி அல்லாத, மாற்று கச்சா எண்ணெய் இறக்குமதி பாதைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது வளைகுடா போரால் உலகளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. மாற்று எரிசக்திகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.. கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுளது.
Read More : “அமெரிக்கா இல்ல.. போரின் முடிவை ஈரான் தான் முடிவு செய்யும்..” டிரம்பின் கருத்துக்கு பதிலடி..



