தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையாக தரையிறங்கியதால் (Hard Landing) ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடந்தது.
மார்ச் 11ஆம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், Boeing 737 MAX 8 வகை விமானம் ஹைதராபாத் – பூக்கெட் வழித்தடத்தில் பறந்து வந்தபோது ஓடுபாதையில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. VT-BWQ என்ற பதிவு எண்ணைக் கொண்ட அந்த விமானம் தரையிறங்கும்போது கடுமையான தாக்கம் ஏற்பட்டதால், விமானத்தின் சக்கரம் ஒன்று பிரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கர அமைப்பு சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அந்த விமானத்தை உடனடியாக ஓடுபாதையிலிருந்து அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த விமானத்தில் 7 விமான ஊழியர்கள், 131 பயணிகள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். மொத்தம் 133 பயணிகளும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பூக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் முன்சக்கரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. விமான ஊழியர்கள் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பயணிகள், பூக்கெட் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பூக்கெட் விமான நிலையம் மதியம் 12.08 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடுபாதையை தற்காலிகமாக மூடுவதாக அறிவிக்கப்பட்டது.. அந்த நேரத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த விமானங்கள் அருகிலுள்ள வான்வெளியில் காத்திருக்கும்படி அறிவிக்கப்பட்டது. சில விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
பின்னர் விமான நிலைய அதிகாரிகள் ஓடுபாதையை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தனர். சேதமடைந்த விமானத்தை அகற்றுவதும், பாதுகாப்பு பரிசோதனைகளும் சுமார் ஆறு மணி நேரம் ஆகும் என முதலில் மதிப்பிடப்பட்டது.
இதற்கிடையில், ஏர் இந்தியா எக்ஸ்பிஸ் நிறுவனத்தின் AXB938 என்ற விமானம் திட்டமிட்ட நேரத்தை விட முன்பாக காலை 11.24 மணிக்கே பூக்கெட் விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும், அதன் திட்டமிட்ட தரையிறங்கும் நேரம் 11.40 மணி எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : 12 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் 31 வயது நபரை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி..! முக்கிய தீர்ப்பு..!



