வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கலாமா? என்ற கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், விசாரணை அதிகாரியாக திருச்சியை சேர்ந்த டிஎஸ்பி பால்பாண்டி இருந்தார். 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இதுவரை 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது.
அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்மை அறியும் சோதனை நடத்த கோரும் 10 பேரும் தங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என தெரிவித்ததால் சிபிசிஐடி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி எஸ்.ஜெயந்தி அறிவித்தார். இது சிபிசிஐடிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த ஓராண்டாக இந்த வழக்கை விசாரணை செய்த திருச்சி பிசிசிஐடி எஸ்பி பால்பாண்டி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வழக்கின் தற்போதைய நிலை காரணமாக சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்கலாமா என்ற கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.