கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோருக்கு இந்து அமைப்புகள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, “ராஜீவ் காந்தி கொலை செய்யப்படும் முன்பு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. உளவுத்துறை அறிக்கை மீது திமுக அன்று கவனம் செலுத்தவில்லை.
கோட்டை ஈஸ்வரன் கோவில் சம்பவம் நடந்த போது ஆட்சியில் இருந்தவர்கள் தான் திமுக. தேர்தலில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் மாறப்போவதில்லை. இதை நாம் உணரும் போதுதான் மக்களுக்கான ஆட்சி நடக்கும். கோவை தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 6 இஸ்லாமியர் உயிரிழந்துள்ளனர். இந்த கூட்டம் மதரீதியான கூட்டம் இல்லை, தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டம் தான் இது. இன்று கோவை ஆபத்தில் இருந்து தப்பித்து விட்டதா? என்றால் இன்னும் தப்பவில்லை.
தமிழ்நாடு இன்னும் ஆபத்தில் இருந்து தப்பவில்லை. கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் தற்கொலை படை தாக்குதல் என்றோம். ஆனால், சிலிண்டர் விபத்து என இவர்கள் என சொல்லுகிறார்கள். உயிரிழந்த முபின் வீட்டில் 130 பொருட்கள் கிடைத்தது. இதை பார்த்த பிறகும் இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறை சொல்கிறது. சம்பவம் நடந்து ஒரு வருடம் 4 மாதம் கழித்து 4 முறை சோதனை செய்துள்ளது என்.ஐ.ஏ. 15 பேர் கைது செய்துள்ளனர். இன்னும் சிலிண்டர் விபத்து என்கிறார்கள். கோவை மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேர்தல் தான் 2024 நாடாளுமன்ற தேர்தல்.
குண்டு வெடிப்பு வழக்கில் 150 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது 16 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை வெளியே விட ஆட்சி செய்த கட்சியும், ஆட்சியில் உள்ள கட்சியும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இவர்களுக்கு பெயில் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளது. ஆனால், இவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சியினர் சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்களின் நாடகத்தை ஒழிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் மேடையில் அரசியல் பேசக்கூடாது. ஆனால், இன்று நான் பேசியாக வேண்டிய சூழலில் உள்ளேன்.
பாராளுமன்ற வேட்பாளர்களின் முதல் வேலை இங்கு நினைவு துண் கட்டுவது தான். வரும் தேர்தலில் பாஜக உறுப்பினரை வெற்றி பெற செய்ய வேண்டும். திமுகவுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என சொல்ல முடியாது. திமுகவில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதி இல்லத்தில் காவல்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியினருடன் கூட்டணி வைக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் பாப்புலர் பிராண்ட் அமைப்பிற்கும் என்ன தொடர்பு?. வலிமையான நாட்டை உருவாக்க பாஜக வேண்டும்” எனத் தெரிவித்தார்.