இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) , பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்தியது. அந்நிறுவனம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.5.30-ம், ஒரு லிட்டர் டீசல் விலையை ரூ.3-ம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால், பெட்ரோல் விலை தற்போது ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.107.93 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ஏறத்தாழ ரூ.97.22 ஆகவும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல்களுக்கு மத்தியில், இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நயாரா நிறுவனம், ஆண்டுக்கு 20 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட, இந்தியாவின் இரண்டாவது பெரிய ஒற்றைத்தள சுத்திகரிப்பு நிலையமான வதினார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி வருகிறது. மேலும், நாடு முழுவதும் 6,500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்நிறுவனம் 450,000 டன் பாலிபுரோப்பிலீன் ஆலையுடன் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் நுழைந்தது.
நயாரா எனர்ஜி முன்பு எஸ்ஸார் ஆயில் என்று அறியப்பட்டது. 2017-ல், ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் மற்றும் டிராஃபிகுரா, யுசிபி இன்வெஸ்ட்மென்ட் குரூப் ஆகியவற்றின் கூட்டமைப்பு, எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை 12.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. பின்னர் அந்நிறுவனத்திற்கு நயாரா எனர்ஜி எனப் பெயர் மாற்றப்பட்டது.
35 நாள் முடக்கம் திட்டம்
இதனிடையே, ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து சுமார் 35 நாட்களுக்கு நயாரா எனர்ஜி தனது செயல்பாடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனில் கிட்டத்தட்ட 8 சதவீதத்தை முடக்கக்கூடும்.
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என அரசு தகவல்
இதனிடையே, நாட்டில் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜிக்கு பற்றாக்குறை இல்லை என்று அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பீதியுடன் பொருட்களை வாங்க வேண்டாம் என்றும் குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் தொடரும் இடையூறுகளால் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா இதுகுறித்து பேசிய போது “ அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் “போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன்” உயர் திறனில் இயங்கி வருவதாகவும், அதே நேரத்தில் “போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருவதாகவும்”, மேலும் நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மாநிலங்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன; உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சமுதாய சமையலறைகள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வணிக ரீதியான எல்பிஜி விநியோகம் தற்போது கட்டம் கட்டமாக 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read More : இந்தியாவுக்கு ஹார்முஸ் திறக்கப்படும்.. 5 நட்பு நாடுகளுக்கு தடை இல்லை.. ஈரான் சொன்ன குட்நியூஸ்..!



