கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது காய்ந்த செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
கர்நாடக மாநிலம் ஹுன்சூர் தாலுக்காவைச் சேர்ந்த தொட்டஹஜ்ஜூர் கிராமத்தில் வசிப்பவர் சுதர்ஷன் – நாவ்யா தம்பதி. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இரண்டாவது மகன் சின்மயி கெளடா பிறந்து ஆறரை மாதமே ஆகிறது. பெரிய பையனுடன் ஆறரை மாத குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த உலர்ந்த செம்பருத்திப் பூ தரையில் கிடந்துள்ளது.
பூவை எடுத்த குழந்தை யாரும் எதிராபாராத வகையில் வாயில் போட்டுக் கொண்டது. பின்னர் அதை விழுங்க முயன்றபோது, அது தொண்டையில் சிக்கி கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டது. ஆரம்பத்தில் குழந்தையின் அவஸ்தைக்கான காரணம் குடும்பத்தினருக்கு புரியவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதுதான் காய்ந்த பூ குழந்தையின் தொண்டையில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இருப்பினும் மருத்துவர்களின் முயற்சி பயனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



