மதுரையைச் சுற்றியுள்ள மலைகளும் குன்றுகளும், தமிழர் பாரம்பரியத்தையும் வரலாறையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமைதியாக சுமந்து நிற்கின்றன. அந்த வரிசையில், சிவகங்கைச் சாலையில் வரிச்சியூர் அருகே அமைந்துள்ள குன்னத்தூர் மலை தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
பாண்டியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்த மலைப்பகுதி, ஒருகாலத்தில் பிரம்மதேய கிராமமாக இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் அதன் பெருமை மறைந்து போனாலும், இன்றும் அதன் அடையாளங்கள் மௌனமாக நிற்கின்றன.
இந்த மலையின் முக்கிய சிறப்பாக, இரு திசைகளில் அமைந்துள்ள இரண்டு குடைவரைக் கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. கிழக்கை நோக்கி அமைந்துள்ள உதயகிரிஸ்வரர் கோயில், உதயமான சூரியனை வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்குத் திசையில் அமைந்துள்ள அஸ்தகிரிஸ்வரர் குகைக் கோயில் மாலை சூரியன் மறையும் நேரத்தில் இயற்கை ஒளியால் கண்கவர் தோற்றத்தை அளிக்கிறது.
அஸ்தகிரீஸ்வரர் குடைவரைக் கோயிலின் அமைப்பு எளிமையானதாக இருந்தாலும், அதன் பின்னணியில் ஆழமான வரலாறு உள்ளது. பாறையை செதுக்கி உருவாக்கப்பட்ட சன்னதியில் சிவலிங்கம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது, ஆரம்பகால கோயில் கட்டிடக்கலையின் தனிச்சிறப்பை வெளிப்படுத்துகிறது. இங்கு துவாரபாலகர்கள் அல்லது அலங்காரச் சிற்பங்கள் இல்லாததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கோயிலின் முன்பகுதியில் காணப்படும் நந்தி சிலை, பின்னாளில் சேர்க்கப்பட்டதாகவும், 13–14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், கோயில் முகப்பில் பாறையில் செதுக்கப்பட்ட கட்டுமானக் கோயில் வடிவம், பாறைக் கோயிலிலிருந்து கட்டுமானக் கோயில்களுக்கு மாறிய கட்டிடக்கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.



