நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி விசிக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஆளுர் ஷாநவாஸ்.. தனது அதிரடியான பேச்சுகள் மூலம் இளம் தலைமுறையினரிடம் கவனம் பெற்று வந்தார் ஆளுர் ஷாநவாஸ்.. ஆனால் இந்த முறை ஆளூர் ஷாநவாஸுக்கு இந்த முறை விசிக தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை..
பாஜகவை துணிந்து எதிர்த்து பேசிவரும் ஆளுர் ஷாநவாஸுக்கு ஏன் சீட் வழங்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. மேலும் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.. இன்னும் சிலரோ அவர் திமுகவுக்கு நெருக்கமானதால் தான் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கருத்து பதிவிட்டு வந்தனர்.. திருமாவளவன் வேண்டுமென்றே அவரை திட்டமிட்டு ஓரங்கட்டியதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர்..
இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ் தனக்கு சீட் வழங்கப்படாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட
8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



