தமிழ் மாதங்களில் முதலாவதாக வரும் சித்திரை மாதம், ஏப்ரல் 14ஆம் தேதி இன்று தொடங்குகிறது. இந்த நாளே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள், தானங்கள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்ய வேண்டியவை: தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டு வாசலில் கோலம் போட்டு, புத்தாடை அணிந்து இறை வழிபாட்டில் ஈடுபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. மா, பலா, வாழை போன்ற முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நெல், நகைகள் உள்ளிட்ட மங்களப் பொருட்களை தட்டில் வைத்து, அதை அதிகாலையில் காண்பது மங்களகரமானது என ஐதீகம் கூறுகிறது.
கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்ததாக கருதப்பட்டாலும், செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து வழிபடலாம். மேலும், அறுசுவைகளும் இடம்பெறும் உணவை தயாரித்து நைவேத்தியமாக சமர்ப்பிப்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் வாழ்க்கையின் பல பரிமாணங்களை உணர்த்துவதாக கருதப்படுகிறது.
வெயில்காலத்தின் தொடக்கமாக இருப்பதால், குடை, செருப்பு, விசிறி போன்றவற்றை தானமாக வழங்குவது சிறந்தது. தண்ணீர் அல்லது நீர் மோர் பந்தல் அமைத்தல், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தண்ணீர் வைப்பது போன்றவை நல்ல கர்ம பலன்களை தரும் என நம்பப்படுகிறது. அதேபோல், இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது செல்வ வளம் அதிகரிக்கும் என நம்பிக்கை நிலவுகிறது. அது சாத்தியமில்லாதவர்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் போன்ற மங்களப் பொருட்களை வாங்குவதும் லட்சுமி கடாட்சம் பெற உதவும் என கூறப்படுகிறது.
செய்யக்கூடாதவை: தமிழ் புத்தாண்டு நாளில் செய்ய வேண்டியவைகள் போலவே, தவிர்க்க வேண்டிய சில செயல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் பழக்கங்கள், ஆண்டு முழுவதும் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. புத்தாண்டு அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. பொதுவாகவே விஷேச நாட்களில் எண்ணெய் குளி எடுக்காதது மரபாக உள்ளது. அதேபோல் அன்றைய தினம் அசைவ உணவு உண்பது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும், நகம் வெட்டுவது, முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது போன்ற செயல்களும் இந்த நாளில் செய்யக் கூடாதவையாக கருதப்படுகின்றன. வீட்டில் இருக்கும் குப்பைகளை வெளியே கொட்டுவது அல்லது பழைய பொருட்களை அகற்றுவது கூட தவிர்க்கப்பட வேண்டும். புதிய பொருட்களை வாங்குவது நல்லதாக இருந்தாலும், வீட்டில் உள்ள பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது. கடன் கொடுப்பதும், கடன் வாங்குவதும் இந்த நாளில் தவிர்க்கப்பட வேண்டும் என நம்பிக்கை நிலவுகிறது.
Read more: முதல் ஓவரிலேயே 3 விக்கெட் வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்.. யார் இந்த பிரஃபுல் ஹிங்கே..?



