திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன் திட்டத்தை மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பனை வழங்கி திமுக வாக்கு சேகரிப்பதாக தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் தனக்கு வரவில்லை எனக் கூறி திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த பெண் திமுக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தலித் சமூகத்தை சேர்ந்த அந்த பெண்ணை திமுகவினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். போலி கூப்பனால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது என தவெக தலைவரும், நடிகருமான விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்சி மண்ணச்சநல்லூரில் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளை தாங்க முடியாமல் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு.
சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்?
இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்?
இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்” என விஜய் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.


