தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், மாநிலம் முழுவதும் 85.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில், மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர்.
இதற்கிடையில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, “உலகெங்கும் உள்ள தமிழர்கள் வந்து வாக்களிக்கும் இந்த நேரத்தில், சென்னை பேருந்து நிலையங்கள் நேற்று மாலை முதலே முடக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் குடும்பங்களுடன், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்களுக்குக் கூட பேருந்து வசதி செய்து தரப்படவில்லை.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒரு வாரத்திற்கு முன்பே தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். பொங்கல், தீபாவளி போன்ற விழாக்களுக்கு ஏற்பாடு செய்வது போல இதற்கும் செய்திருக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.
மேலும், போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் முன்வைத்த அவர், “போக்குவரத்து துறை முதன்மை செயலாளர், மேலாண்மை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நிலையில் இருந்தும், அவர்கள் மு.க. ஸ்டாலின் கூறுவதையே கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் உத்தரவுகளை அவர்கள் மதிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையங்களில் 7 மணி, 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலர் பயணிக்க முடியாமல் திரும்பிச் செல்கிறார்கள். மாநிலம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. காவல்துறையினர் எங்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை. மக்கள் அதிகளவில் வாக்களித்தால் தோல்வி அடைவோம் என்ற பயத்தில், சில ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்தி இந்த நிலையை உருவாக்கியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.
ஜனநாயக கடமையை நிறைவேற்ற குடும்பம் குடும்பமாக வந்த மக்களுக்கு அடிப்படை வசதியாக பேருந்து சேவையே வழங்கப்படவில்லை. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனவும் ஆதவ் அர்ஜுனா கடுமையாக குற்றம்சாட்டினார்.
Read more: கெட்ட கொழுப்பை கரைக்கும் பூசணி ஜூஸ்.. தினமும் குடிப்பதால் எக்கச்சக்க நன்மைகள்.!



