போரின் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.. இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்களின் விலை உயர்கிறது.. ஆனால் ஆணுறை விலைகளும் உயரும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா?
இதைக் கேட்பதற்குச் சற்று ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இது முற்றிலும் உண்மை. தற்போது நிலவி வரும் அமெரிக்க-ஈரான் போர் ஆணுறை சந்தையையும் எதிர்பாராத விதமாகப் பாதித்துள்ளன. உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தியாளரான கரெக்ஸ், தற்போது விலைகளை 30 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
இந்த மலேசிய நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் ஆணுறைகளை உற்பத்தி செய்கிறது. உலகளவில் உற்பத்தி செய்யப்படும் ஆணுறைகளில் ஐந்தில் ஒரு பங்கை அவர்கள் தயாரிக்கிறார்கள். இந்நிறுவனம் டியூரெக்ஸ் (Durex) மற்றும் ட்ரோஜன் (Trojan) போன்ற பிரபலமான பிராண்டுகளுக்கு ஆணுறைகளை வழங்குகிறது. இருப்பினும், ஈரானுடனான போர்ச் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, ஆணுறைகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளன.
நைட்ரைல், செயற்கை ரப்பர், பேக்கேஜிங் பொருட்கள், சிலிக்கான் எண்ணெய் மற்றும் அலுமினியத் தகடு ஆகியவை ஆணுறை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. “சில மூலப்பொருட்களின் விலைகள் 100 சதவீதம் அதிகரித்துள்ளன. விலைகளை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று கேரெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ மியா கியாட் கூறினார். தளவாடப் பிரச்சனைகள் மற்றும் அதிகரித்த போக்குவரத்துச் செலவுகள் உற்பத்திச் செலவுகளை உயர்த்துகின்றன என்று அவர் விளக்கினார்.
விநியோகச் சங்கிலிப் பிரச்சனைகள் தொடர்ந்தால், உற்பத்தி நிறுத்தப்படக்கூடும் என்று அந்நிறுவனம் எச்சரிக்கிறது. கேரெக்ஸ் தனது மூலப்பொருட்களை ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஒரு இரசாயனம் கூட கிடைக்காவிட்டால், தொழிற்சாலையில் பணிகள் நின்றுவிடும் என்று தலைமை நிர்வாக அதிகாரி கவலை தெரிவித்தார். அரசாங்கத்தால் நடத்தப்படும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய விநியோகஸ்தராகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், வளரும் நாடுகளில் ஆணுறைகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. நிலைமை இப்படியே தொடர்ந்தால், தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் ஆணுறைகளைப் பதுக்கத் தொடங்குவார்கள், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், எண்ணெய் நெருக்கடியால் தனிநபர்களின் வாழ்வில் ஏற்பட்ட எதிர்பாராத நிதிச் சுமை தற்போது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.



