டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் புதிதாக அமைக்கப்பட்ட பிரிவான டெல்லி மெட்ரோ இன்டர்நேஷனல் லிமிடெட்டின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சஞ்சய் ஜாமுவார் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லிக்கு அப்பால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மெட்ரோ திட்டங்கள் மற்றும் செயல்பாடு–பராமரிப்பு பணிகளை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
DMRC தனது அதிகாரப்பூர்வ X பதிவில் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது. அதில், அரசாங்கத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட DMIL, மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துதல், ஆலோசனை சேவைகள் வழங்குதல் மற்றும் போக்குவரத்து அமைப்புகளுக்கான நீண்டகால திட்டமிடல் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற அரசு அமைப்புகள் மற்றும் கடன் வழங்குநர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனையும் வழங்கும் அதிகாரம் DMIL-க்கு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பிரிவு, DMRC-யின் பல ஆண்டுகால அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் உலகளாவிய அளவில் பயன்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் மெட்ரோ திட்டங்களை உருவாக்க உதவிய அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, வெளிநாட்டு திட்டங்களிலும் DMRC தனது பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
புதிய CEO சஞ்சய் ஜாமுவார் குறித்து DMRC வெளியிட்ட தகவல்படி, அவர் இந்திய ரயில்வே சேவை (IRTS) முன்னாள் அதிகாரி ஆவார். மேலும் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் பணியாற்றிய பரந்த சர்வதேச அனுபவம் கொண்டவர். குறிப்பிடத்தக்க வகையில், 1998-ஆம் ஆண்டு DMRC தொடங்கிய காலத்தில் அவர் முதல் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) ஊழியராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
DMRC தற்போது இந்தியாவைத் தாண்டி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. பங்களாதேஷின் டாக்கா மெட்ரோ திட்டத்தில் ஆலோசகராகவும், சென்னை, மும்பை மற்றும் பாட்னா மெட்ரோ திட்டங்களில் முக்கிய O&M பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில DMIL உருவாக்கம், DMRC-யின் உலகளாவிய தடத்தை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: கருப்பு திராட்சை VS பச்சை திராட்சை.. உடல் எடையை குறைக்க இரண்டில் எது சிறந்தது..?



