இந்தோனேசியாவில் குழந்தைகள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. யோக்யகார்த்தா பகுதியில் செயல்பட்டு வந்த ‘லிட்டில் அரேஷா’ என்ற குழந்தைகள் காப்பகத்தில் காவல்துறை நடத்திய சோதனையில், சிறு குழந்தைகள் மீது கடுமையான துஷ்பிரயோகம் நடந்தது தெரியவந்தது.
தகவலின்படி, இந்த மையத்தில் குறைந்தது 103 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அதில் 53 குழந்தைகள் வரை தவறாக நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், இரண்டு வயதிற்குக் குறைவான குழந்தைகள் கூட கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சில குழந்தைகளின் உடலில் வெளிப்படையான காயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், அந்த மையத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், மிகச் சிறிய மூன்று மீட்டர் அகலம் கொண்ட அறைகளில் ஒரே நேரத்தில் 20 குழந்தைகள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த விசாரணையின் பேரில், மையத்தின் முதல்வர், அறக்கட்டளையின் தலைவர் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அந்த காப்பகம் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளக்க முடியாத காயங்கள் ஏற்பட்டிருப்பதை முன்பே கவனித்ததாக தெரிவித்துள்ளனர். சிலர், குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக பசியுடன் வீடு திரும்பியதாகவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் இந்தோனேசியாவில் குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் கண்காணிப்பு குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. நாட்டில் 3,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் உள்ளதாகவும், அவற்றில் பல உரிய அனுமதியின்றி செயல்படுகின்றன என்றும் இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அரசியல் தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “மன்னிக்க முடியாத குற்றம்” என சிலர் விமர்சித்துள்ள நிலையில், அனைத்து குழந்தைகள் காப்பகங்களிலும் கடுமையான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.



