மும்பையில் மூதாட்டி ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடர்பாக பம்பாய் உயர் நீதிமன்றம் முக்கிய திருத்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த தாரிணிபென் (90) மற்றும் அவரது மகள் த்வனி தேசாய் (57) ஆகியோர், 2017 ஆம் ஆண்டு சிலருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இது 2015 ஆம் ஆண்டு ஷியாம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
சங்கத்தின் முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள் சிலர் தங்களை “கட்டணம் செலுத்தாதவர்கள்” என தவறாக குறிப்பிடப்பட்டதாகவும், அதனால் தங்கள் பெயர் கெட்டதாகவும் கூறி தாய்–மகள் இருவரும் ரூ. 20 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஜிதேந்திர ஜெயின் தலைமையிலான தனி நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, இந்த வழக்கு “ஈகோ மோதல்” போல இருப்பதாகவும், நீதித்துறை நேரத்தை வீணாக்கும் வகையில் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும், இரு தரப்பும் மன்னிப்பு மூலம் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
முதலில், இந்த வழக்கை 2046 ஆம் ஆண்டுக்குப் பிறகு மட்டுமே விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை நீதிமன்றம் மறுநாளில் திருத்தியுள்ளது. தற்போது, அந்த கடுமையான ஒத்திவைப்பு உத்தரவை நீக்கி, வழக்கை வரும் ஜூலை 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more: 200+ சீட்.. கருத்துக்கணிப்பு மாறும்.. விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்! அடித்து சொன்ன செங்கோட்டையன்..!



