ஷாஜகான் மற்றும் மும்தாஜ் காதல் கதையைக் கேட்டாலே, பிரம்மாண்டமான வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன தாஜ்மஹால் தான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், மும்தாஜ் இறந்த உடனே தாஜ்மகாலில் அடக்கம் செய்யப்படவில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒரு வரலாற்று உண்மை.
1631 ஜூன் 17ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் நகரில், தனது 14வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மும்தாஜ் உயிரிழந்தார். அப்போது ஷாஜஹான்
தெற்கில் போர்ப் பயணத்தில் இருந்தார். திடீர் மரணம் காரணமாக, அவரது உடலை உடனடியாக ஆக்ராவிற்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால், புர்ஹான்பூரில் உள்ள ஜைனாபாத் தோட்டத்தில், தப்தி நதிக்கரையில் அமைந்திருந்த அஹுகானா எனப்படும் இடத்தில் மும்தாஜ் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டார்.
அவரது உடல் சிதைவடையாமல் இருக்க பதப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக வைத்திருந்தனர். இங்கு அவர் சுமார் ஆறு மாதங்கள் வைக்கப்பட்டிருந்தார். பின்னர், மிகுந்த மரியாதையுடன் அவரது உடல் ஆக்ராவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலில் யமுனை நதிக்கரையில் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் தாஜ்மஹால் கட்டுமானம் நிறைவடைந்ததும், அவர் இறுதியாக அங்கு மாற்றப்பட்டார்.
இன்றும் அஹுகானா பகுதியில் மும்தாஜ் முதல் கல்லறை இருந்ததாகக் கூறப்படும் கட்டிடம் காணப்படுகிறது. ஆனால் பராமரிப்பு இல்லாததால் அது தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. ஷாஜகான் ஏன் புர்ஹான்பூரில் தாஜ்மஹாலைக் கட்டவில்லை என்பது குறித்து வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கின்றனர். இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
முதலாவதாக, தாஜ்மஹால் போன்ற ஒரு பிரம்மாண்டமான கட்டமைப்பின் எடையைத் தாங்கும் அளவுக்கு புர்ஹான்பூரின் மண் வலுவாக இல்லை. இரண்டாவதாக, ராஜஸ்தானில் உள்ள மக்ரானாவிலிருந்து புர்ஹான்பூருக்கு பளிங்குக் கற்களைக் கொண்டு செல்வது மிகவும் செலவு மிக்கதாகவும் சவாலானதாகவும் இருந்தது. மக்ரானாவிற்கு மிக அருகில் இருந்ததாலும், யமுனா நதி வழியாகக் கற்களைக் கொண்டு செல்வது எளிதாக இருந்ததாலும் ஆக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டது.



