கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், பொன்னானி பகுதியைச் சேர்ந்த 24 வயதான முகமது என்பவருக்கும், 22 வயதான பாத்திமாவுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. முகமது போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதன் தாக்கத்தில், தனது மனைவியின் நடத்தையில் அவர் அடிக்கடி சந்தேகம் கொண்டிருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்தில் சென்ற முகமது, மனைவியைத் தாக்கியதுடன், துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மூச்சுத்திணறிய பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, குற்றத்தை மறைக்க திட்டமிட்ட முகமது, நள்ளிரவு நேரத்தில் மனைவியின் உடலை பொன்னானி துறைமுகம் அருகிலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரைக்கு கொண்டு சென்று, மணலில் புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை, அந்தப் பகுதியில் சென்ற மக்கள் மணலில் ஒரு பெண்ணின் கால் மட்டும் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், தெரு நாய்கள் அந்த உடலை இழுத்துக் கொண்டிருந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அது பாத்திமா என்பதும் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முகமது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த நிலையில், இறுதியில் தனது மனைவியை சந்தேகத்தின் காரணமாக கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, போலீசார் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாத்திமாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலையின் பின்னணி குறித்து முழு தகவல்கள், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே தெளிவாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read more: தேநீர் அருந்தும்போது சிகரெட் குடிப்பது சாதாரண விஷயமல்ல..! மிகப்பெரிய ஆபத்து..!



