2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை எட்டவில்லை. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர்.
இடதுசாரி கட்சிகள் விஜய்க்கு ஆதரவளிக்கலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டாலும், அந்தக் கட்சிகளின் தலைமைகள் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அவர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எண்ணிக்கையைப் பார்க்கும்போது, தவெக 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றதாகக் கூறப்படுகிறது. அதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அவர் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே 107 தான் கணக்கு.. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் அவசியம். சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறாத சூழலில், விஜய்யால் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து ஆதரவைப் பெற்றே ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால், இதிலும் சிக்கல்கள் உள்ளன. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்த இரண்டு முக்கிய கட்சிகளில் இருந்து நேரடியாக எம்எல்ஏக்களை பிரித்து வருவது சாத்தியமற்றதாக பார்க்கப்படுகிறது.
இதற்குப் பதிலாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் (5), சிபிஎம் (2), சிபிஐ (2), விசிக (2) போன்ற கட்சிகளை அணுகி ஆதரவு பெறவே வாய்ப்புகள் அதிகம்.. அல்லது, காங்கிரஸ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக (4) கட்சியினரையும் இணைத்து, விசிக ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்கலாம்..
எண்ணிக்கையாக 118 எம்எல்ஏக்கள் கிடைத்தால் பெரும்பான்மை நிரூபிக்கலாம். ஆனால் நிலையான ஆட்சி என்று ஆகிவிடாது. ஏனெனில், ஒரு எம்எல்ஏ இறந்துவிட்டாலோ அல்லது கட்சி மாறினாலோ அல்லது ஏதேனும் காரணத்தால் பதவி இழந்தாலோ, பெரும்பான்மை குறைந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, கூடுதல் ஆதரவு மிக அவசியமாகிறது. இந்த நிலையில், இடதுசாரி கட்சிகளின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
இதற்கான காரணம், கடந்த காலத்தில் திமுகவுடன் இணைந்து செயல்பட்ட அனுபவமே என்று கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட சில சர்ச்சைகள் குறிப்பாக சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம், பூர்வகுடி மக்களின் இடம்பெயர்வு போன்ற பிரச்சினைகள் போன்றவற்றில் இடதுசாரி கட்சிகளும் விமர்சனத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. கொள்கை அடிப்படையில் செயல்படும் கட்சிகளாக இருந்தும் இத்தகைய குற்றச்சாட்டுகளை சந்தித்ததால், தற்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்கிறார்கள்.
விஜய் தலைமையிலான கட்சி இன்னும் முழுமையான கொள்கை அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை என்ற பார்வையும் சிலரிடத்தில் உள்ளது. எனவே, உடனடியாக கூட்டணியில் இணையாமல், அவரின் செயல்பாடுகளை கவனித்து பார்க்க வேண்டும் என்ற மனநிலையே கம்யூனிஸ்ட் கட்சிகளில் நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தவெகவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து முடிவு எடுக்கலாம் என்ற எண்ணமும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



