தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சியமைக்க குறைந்தபட்சமாக 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆனால், தனித்து ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்டது.
5 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் தற்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடாங்கர், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இன்று தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் துண்டை தவெக தலைவர் விஜய்க்கு அணிவித்தனர். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைப்பிற்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யிடம் வழங்கினர். இதன் மூலம், தவெகவின் சட்டமன்ற பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், தமிழக ஆளுநர் இன்று சென்னை வந்துள்ள நிலையில், பிற்பகல் 3 மணியளவில் காங்கிரஸ் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Read more: விசிகவிடம் ஆதரவு கோரிய தவெக.. திருமாவின் முடிவு என்ன..? திமுகவுக்கு ஷாக் கொடுப்பாரா..?



