2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை கொடுத்தன.. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு இரு பெரும் திராவிட கட்சிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.. தாங்கள் சந்தித்த முதல் தேர்தலிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைய உள்ளது.. அதாவது தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை.. எனவே விஜய்க்கு இன்னும் கூடுதலாக 10 இடங்கள் தேவை.
இன்று தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்தது.. இதனால் தவெகவின் பலம் 108-ல் இருந்து 113ஆக உயர்ந்தது. எனவே ஆட்சியமைக்க விஜய்க்கு இன்னும் 5 இடங்கள் தேவை..
இதனிடையே தவெகவுக்கு ஆதரவளித்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுகவில் போர்க்கொடி எழுந்துள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது..
தவெகவுக்கு ஆதரவளித்து கூட்டணி ஆட்சி அமைத்தால் தான் ஆட்சியில் இடம்பெற முடியும் என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இபிஎஸ்-இடம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.. ஆனால் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம், கூட்டணி ஆட்சி அமைத்தால் பல்வேறு சிக்கல்கள் வரக்கூடும் என்று இபிஎஸ் கூறி வருகிறாராம்.. மேலும் சி.வி சண்முகத்திற்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது..
இந்த நிலையில் இபிஎஸ் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.. தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் ” அதிமுக இயக்கம் மிகப்பெரிய இயக்கம்.. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம், ஜெயலலிதாவால் காக்கப்பட்டது.. பொதுச்செயலாளர் எடபபடி பழனிசாமி தலைமையில் சீரோடும் சிறப்போடும் செயல்பட்டு வருகிறது..
எந்த சூழ்நிலையிலும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறேன்.. தவெவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பான செய்தி.” என்று தெரிவித்தார்..



