சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது.. முதல் தேர்தலிலேயே 108 இடங்களை தவெக வென்றது.. எனினும் தவெக ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
5 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.. மேலும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஐ, சிபிஎம் தலா 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளனர்.. இந்த கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்..
இதனிடையே இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.. எனினும் 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதுவரை ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.. இதனால் நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் திட்டமிட்டப்படி பதவியேற்பு விழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. எனினும் ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன..
கோவா, மணிப்பூர், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் ஒருதலைபட்சமாக இருந்த போது உச்சநீதிமன்றம் தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன.. தற்போது தமிழ்நாட்டிலும் ஆளுநர் மரபுகளை மீறி முட்டுக்கட்டை போடுவது ஜனநாயகப் படுகொலை என விமர்சிக்கப்பட்டு வருகிறது..
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது.. இந்த சூழலில் ஆட்சி அமைக்கும் விவாகரத்திலேயே ஆளுநர் – தவெக இடையே முரண்பாடு எழுந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது..


