தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பலரும் ஏசி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஆனால், வீட்டில் இருக்கும் சாதாரண ஏர் கூலரையே சில எளிய மாற்றங்களால் ஏசியைப் போல குளிர்ச்சி தரும் சாதனமாக மாற்ற முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிக செலவோ பெரிய தொழில்நுட்பமோ தேவையில்லை என்பதே இதில் சிறப்பு.
தேன்கூடு பேட்கள்: ஏர் கூலரின் செயல்திறன் அதன் குளிர்விக்கும் பேட்களில்தான் உள்ளது. பழைய வைக்கோல் அல்லது சாதாரண பேட்களை பயன்படுத்துவதை விட, தேன்கூடு (Honeycomb) வடிவிலான பேட்களை பயன்படுத்துவது சிறந்தது. இவை தண்ணீரை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்வதால், காற்று அதிக நேரம் குளிர்ச்சியாக வெளியே வரும். இதனால் அறை முழுவதும் சீரான குளிர்ச்சி கிடைக்கும்.
நறுமண எண்ணெய்கள்: தண்ணீர் தொட்டியில் லெமன்கிராஸ் அல்லது லாவெண்டர் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களில் சில துளிகள் சேர்த்தால், காற்று குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியான மணத்தையும் தரும். இது அறையின் சூழலை மனதுக்கு அமைதியானதாக மாற்றும்.
ஐஸ் கட்டி ட்ரிக்: ஐஸ் கட்டிகளை நேரடியாக தண்ணீர் தொட்டியில் போடுவது மோட்டாருக்கு சேதம் ஏற்படுத்தக்கூடும். அதற்கு பதிலாக, ஐஸ் கட்டிகளை மேல் தண்ணீர் தட்டில் வைப்பது சிறந்தது. இதனால் பேட்கள் வழியாக செல்லும் தண்ணீர் குளிர்ந்து, வெளியே வரும் காற்று 5°C முதல் 8°C வரை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
காற்றோட்டம்: ஏசியைப் போல மூடிய அறை ஏர் கூலருக்கு பொருத்தமானது அல்ல. கூலரை ஜன்னலுக்கு அருகில் வைத்து, வெளிக் காற்று உள்ளே வருமாறு அமைக்க வேண்டும். அதே நேரத்தில் அறையின் எதிர்புற கதவை சிறிது திறந்து வைத்தால், குறுக்குக் காற்றோட்டம் உருவாகி வெப்பமான காற்று வெளியேறி, குளிர்ந்த காற்று முழு அறையிலும் பரவும்.
நிபுணர் ஆலோசனை: கூலரை இயக்கியவுடன் பங்க் ஆன் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் 10–15 நிமிடங்கள் தண்ணீர் பம்பை மட்டும் இயக்கி பேட்கள் முழுமையாக நனைய விட வேண்டும். பின்னர் பங்க் இயக்கினால் ஆரம்பத்திலிருந்தே அதிக குளிர்ச்சி கிடைக்கும்.
கடின நீர் அல்லது உப்பு நீர் பயன்படுத்தும் பகுதிகளில் தொட்டியில் படிவங்கள் உருவாகலாம். இதனால் காற்றோட்டம் குறையும். அதனால் வாரந்தோறும் தண்ணீரை மாற்றுவது அவசியம். மேலும் வினிகர் அல்லது பேக்கிங் சோடா பயன்படுத்தி தொட்டியை சுத்தம் செய்தால் பாசி உருவாவதைத் தடுக்கலாம்.
Read more: விசிக பதவிகளை கேட்கிறதா..? அவதூறு பரப்பாதீங்க..! ரவிக்குமார் MP மறுப்பு..!



