நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது..
பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்..
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்தது.. இது தவிர காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என தவெகவுக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது..
தமிழ்நாட்டின் முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தவெக தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை மே 13-ம் தேதி அன்றோ அதற்கு முன்னரோ நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அறிவுறுத்தி இருந்தார்.. அதன்படி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது..
நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்..?
தவெக தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நாளன்று அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களின் அடிப்படையில் தான் பெரும்பான்மைக்கு எத்தனை இடங்கள் தேவை என்பது தீர்மானிக்கப்படுகிறது..
அவையில் 234 உறுப்பினர்கள் இருக்கும் போது, பெரும்பான்மைக்கு தேவையானது 118 இடங்கள் ஆகும்.. அதாவது, அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் அதிகமான எண்ணிக்கையே பெரும்பான்மை எனக் கருதப்படுகிறது..
மே 13-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு, ரகசிய வாக்கு சீட்டு முறையில் நடைபெறாது.. குரல் வாக்கெடுப்பு மூலமே நடைபெறும்.. காரணம், இதற்கென வகுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை விதிகள்.. மேலும் டிவிஷன் என்ற மற்றொரு முறையும் நடைமுறையில் உள்ளது..
குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் வாக்கெடுப்பு ஆகிய இரண்டு நடைமுறைகளும் பிரிட்டனின் நாடாளுமன்ற விதிகளில் இருந்து பெறப்பட்டவை மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டம் இயற்றும் அவைகளில் இவை நடைமுறையில் இருந்தன..
இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை தலைவர் தலைமையில் சட்டப்பேரவை கூட்டப்படும்.. முதலமைச்சர் அல்லது ஆளும் தரப்பை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் அமைச்சரவை மீது நம்பிக்கை கோரி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவார்..
ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பினரின் பங்கேற்புடன் ஒரு சிறிய விவாதம் நடைபெறும்.. விவாதம் முடிந்ததும், சட்டப்பேரவை தலைவர் அந்த தீர்மானத்தை சபையில் வாக்கெடுப்புக்காக முன்மொழிவார்.. தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பவர்களை ஆம் என்றும், தீர்மானத்திற்கு எதிராக இருப்பவர்களை இல்லை என்றும் கூறுமாறு சட்டப்பேரவை தலைவர் அறிவுறுத்துவார்..
அதன்பின்னர், சட்டப்பேரவை தலைவர் தீர்மானத்தின் முடிவை அறிவிப்பார்.. பெரும்பான்மை கிடைத்துவிட்டால், புதிய அரசு தனது ஆட்சியை தொடரும்.. பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய அரசு கலைக்கப்படுவதாக ஆளுநர் அறிவிப்பார்.. இத்தகைய நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ஒரு வாக்கு கூட ஆட்சியை கவிழ்க்கக் கூடும்..



