நம் பாரம்பரிய உணவுகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் நெல்லிக்காய், உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் சக்திவாய்ந்த இயற்கை உணவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெல்லிக்காயில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
முதல் 3 நாட்களில் என்ன நடக்கும்? ஒரு மாதம் தொடர்ந்து நெல்லிக்காய் சாறு குடித்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகின்றனர். முதல் சில நாட்களிலேயே செரிமானத்தில் முன்னேற்றம் காணப்படலாம். அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் குறைவதுடன், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது.
ஒரு வாரத்தில் கிடைக்கும் பலன்: ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட தொடங்கும். இதனால் சளி, இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறையலாம். அதோடு சருமத்தில் பொலிவு அதிகரித்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு தடயங்கள் குறைய தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இரண்டாவது வாரம்: இரண்டு வாரங்கள் தொடர்ந்து நெல்லிக்காய் சாறு குடிப்பது தலைமுடி ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும். முடி உதிர்தல் குறைந்து, முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறலாம். வளர்சிதை மாற்றம் மேம்படுவதால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இது உதவியாக இருக்கலாம்.
21 நாட்களில் கிடைக்கும் பலன்: 15 முதல் 21 நாட்கள் வரை தொடர்ந்து அருந்தினால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான செயல்பாடுகளில் மாற்றம் தெரியும். மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் குறையக்கூடும். சிலருக்கு கண் பார்வை தெளிவாக இருப்பதாகவும் அனுபவம் இருக்கலாம்.
1 மாதம் தொடர்ந்து அருந்தினால்: ஒரு மாதம் முழுவதும் தொடர்ந்து நெல்லிக்காய் சாறு குடிப்பதால் உடலின் ஆற்றல் அளவு அதிகரித்து, சோர்வு குறையலாம். மன அழுத்தம் குறைந்து மனத்தெளிவு மேம்படும் என கூறப்படுகிறது. நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனுக்கும் இது உதவக்கூடும்.
மேலும், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவலாம் என்றும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவக்கூடும் என்பதால், பலர் இதை இயற்கை ஆரோக்கிய பானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்கனவே நீரிழிவு, குறைந்த இரத்த அழுத்தம் அல்லது வயிற்று புண் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் அதிக அளவில் நெல்லிக்காய் சாறு குடிப்பதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
Read more: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. விசிக, ஐயூஎம்எல் இடம் பெறுமா..? எதிர்ப்பார்ப்பில் தமிழகம்..



