நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.
இந்த சூழலில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது.. இந்த பட்டியலில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர். விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 4 பெண்கள், 7 பட்டியலினத்தினர் உள்ளனர்.
இதனிடையே தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று விசிக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார்.. அமைச்சரவையில் பங்கு பெறுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தெரிவித்திருந்தன. ஆலோசனையின் முடிவில் அமைச்சரவையில் பங்கேற்பதாக இரு கட்சிகளும் அறிவித்தன..
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது.. இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.. விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு, ஐயுஎம்.எல் கட்சி எம்.எல்.ஏ ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.. இந்த இருவருக்கும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்..
இதன் மூலம் 1952-க்கு பின்னர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் என கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே 7 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்ற நிலையில் விசிகவின் வன்னி அரசு மூலம் இந்த அமைச்சர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.. அதே போல் சிறுபான்மையினர் 5 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்..



