இயற்கை நமக்கு அளித்திருக்கும் மிகவும் இயல்பான மற்றும் ஆரோக்கியமான ஆற்றல் பானம் ‘இளநீர்’ ஆகும். இது சூரிய வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்களையும் வழங்குகிறது. இதனால்தான் பலர் இளநீரைத் தொடர்ந்து பருகி வருகின்றனர். இருப்பினும், தேவைப்படும்போதெல்லாம் குடிப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நேரங்களில் இளநீரைப் பருகுவது உடலுக்கு அதிகபட்ச நீர்ச்சத்தையும் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (உயிர்ச்சத்துக்கள்) நிறைந்துள்ளன. நாளின் வெவ்வேறு நேரங்களில் இதைப் பருகுவது நமது உடலுக்குப் பல்வேறு வழிகளில் நன்மைகளை அளிக்கிறது. நாளின் வெவ்வேறு நேரங்களில் இளநீரைப் பருகினால் உடலில் எத்தகைய அற்புதமான மாற்றங்கள் நிகழும் என்பதை பார்க்கலாம்.
காலையில் உறக்கத்திலிருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் இளநீரைப் பருகுவதே சிறந்தது. இதில் உள்ள ‘லாரிக் அமிலம்’ (lauric acid) உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வேகத்தையும் அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தவும் துணைபுரிகிறது.
உடற்பயிற்சிக் கூடத்தில் (Gym) பயிற்சி செய்பவர்களுக்கும், ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும், உடற்பயிற்சிக்கு முன்னரோ அல்லது பின்னரோ பருகுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த இயற்கை விளையாட்டுப் பானமாக இளநீர் திகழ்கிறது. உடற்பயிற்சிக்கு முன்பு இதைப் பருகுவது உடலுக்குப் போதுமான ஆற்றலை வழங்குகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு இதைப் பருகுவது, வியர்வை மூலம் வெளியேறிய எலக்ட்ரோலைட்டுகளை உடனடியாக ஈடுசெய்து, தசைச் சோர்வு மற்றும் நீர்ச்சத்து இழப்பைக் குறைக்க உதவுகிறது.
உணவுக்கு முன்னரோ அல்லது பின்னரோ: மதிய அல்லது இரவு உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இளநீரைப் பருகுவது, வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும். இது அதிகப்படியாக உண்பதைத் தடுத்து, உங்கள் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்..
உணவுக்குப் பிறகு: உணவருந்திய பிறகு இளநீரைப் பருகுவது செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. இது நெஞ்செரிச்சல் (acidity), வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது..
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் மிகவும் நன்மை பயக்கும் பானமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வு, மந்தநிலை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு இளநீரைப் பருகுவது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைத்து, நிம்மதியான உறக்கத்தைப் பெற உதவுகிறது. மேலும், இரவு முழுவதும் உங்கள் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இது துணைபுரிகிறது.
நினைவில் கொள்ள வேண்டியவை: இளநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது என்றாலும், சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகமாக உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இதை உட்கொள்ள வேண்டும்..



