அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் காரசாரமான தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்களை டிரம்ப் கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் விரக்தியை வெளிப்படுத்தியதாகவும், தொடர்ந்து நடைபெறும் இந்த குண்டுவீச்சு நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாக எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. டிரம்ப் நெதன்யாகுவை வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்ததோடு, அவர் இந்தச் சூழ்நிலையைக் கையாண்ட விதம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது..
“நீ ஒரு பைத்தியக்காரன். நான் மட்டும் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய். நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக எல்லோரும் இஸ்ரேலையே வெறுக்கிறார்கள்,” என்று டிரம்ப் கூறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
டிரம்ப் வெளிப்படையாகவே கடும் கோபத்தில் இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் நெதன்யாகுவிடம், “என்ன எழவுடா செஞ்சிட்டு இருக்க?” என்று கத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆக்சியோஸ் பத்திரிகைக்கு இதுகுறித்து பேட்டியளித்த ஒரு அமெரிக்க அதிகாரி, நெதன்யாகு நன்றிகெட்டவர் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதாகவும், தனது அரசியல் இருப்புக்கு அமெரிக்க ஆதரவே உதவியது என்றும் வாதிட்டதாகக் கூறினார்.
பெய்ரூட் மீது தாக்குதல் நடத்தும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், இஸ்ரேலை உலகளவில் மேலும் தனிமைப்படுத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
பதற்றம் அதிகரித்ததன் மீதான தனது கோபத்தைப் பிரதிபலிக்கும் வகையில், லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு டிரம்ப் விளக்கம் கோரியதாவும் கூறப்படுகிறது..
லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகக்கூடும் என்று அன்றைய தினம் முன்னதாக ஈரான் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த உரையாடல் நிகழ்ந்தது.
ஆக்சியோஸின் கூற்றுப்படி, பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தினருடன் தொடர்புடைய கட்டிடங்கள் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஆகியவை டிரம்பின் கவலைகளுக்கு ஒரு பகுதியாகக் காரணமாக அமைந்தன. பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் இனி தாக்குதல் நடத்தத் திட்டமிடவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
எனினும் இந்த தகவலுக்கு முற்றிலும் மாறாக, டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நெதன்யாகுவுடன் மிகவும் பயனுள்ள உரையாடல் நடத்தியதாகவும், இஸ்ரேல் இனி லெபனானுக்குத் தனது படைகளை அனுப்பாது என்றும், அங்குள்ள படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். ஹிஸ்புல்லாவுடனும் இதேபோன்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க அதிபர் கூறினார்.
“இஸ்ரேல் பிரதமர் பிபி நெதன்யாகுவுடன் நான் மிகவும் பயனுள்ள உரையாடல் நடத்தினேன். பெய்ரூட்டிற்கு எந்தப் படைகளும் செல்லாது, மேலும் செல்லும் வழியில் உள்ள படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன,” என்று அவர் அந்தப் பதிவில் எழுதியிருந்தார்.
“அதேபோல், உயர் மட்டப் பிரதிநிதிகள் மூலம் ஹிஸ்புல்லாவுடன் நான் ஒரு நல்ல தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன். அதில், அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் அவர்களைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
Read More : EMI செலுத்துவோருக்கு பெரும் நிம்மதி.. வட்டி விகிதங்கள் குறித்து RBI-இன் முக்கிய முடிவு..!



