சட்டமன்ற தேர்தலுக்கு பின் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியது.. இபிஎஸ் அணி – எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாக பிளவுபட்ட நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்த இரு அணிகளும் மீண்டும் இணைந்தது.. இந்த சூழலில் மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ எஸ். ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு இந்த 5 பேரும் தவெகவில் இணைந்தனர்..
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் தனது விலகல் கடிதத்தை அவர்கள் வழங்கினார்.. இதன் மூலம் கடந்த ஒரே மாதத்திற்குள் பதவி விலகிய அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது..
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் “ 4 இருக்கைகள் கொண்ட சோபா 5 இருக்கைகள் கொண்ட சோபாவா மேம்படுத்தப்பட்டுள்ளது..” என்று பதிவிட்டு தவெக கொடி நிறத்தில் ஒரு சோபாவையும் பதிவிட்டிருந்தார்..
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு அமைச்சர் அருண் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல… மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!” என்று குறிப்பிட்டுள்ளார்..



