தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தவெக அரசு வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கை.. தவெக அரசின் இயலாமையை மூடி மறைக்கும் யுக்தியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..
2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற போது அன்றைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.. அப்போது 15 ஆண்டுகளை எடுத்துக் கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.. ஆனால் தற்போது 2026 தவெக அரசு 5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது ஏன்..? திமுக ஆட்சியை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்ல வேண்டிய காரணம் என்ன..? முந்தைய ஆட்சிகளின் நிலை குறித்து பேச என்ன தயக்கம்..? முந்தைய ஆட்சிகள் பற்றி வெள்ளை அறிக்கையில் இல்லாதது யாரை காப்பாற்றுவதற்கான முயற்சி..?
இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமே, என்ன சொல்ல தப்பித்து கொள்வது என்பது தான்.. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டோம்.. அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்..
புதிய திட்டங்களை தற்போதைய சூழலில் கொண்டு வர முடியாது என தவெக வெள்ளை அறிக்கையில் கூறுகிறது.. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என எடுத்த எடுப்பிலேயே தவெக கூறுகிறது.. ஆளுநர் உரையில் புதிய திட்டங்களை சொல்வதற்கு வாய்ப்பில்லை என்று தவெக கூறூகிறது.. சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும் அதே பல்லவியை வெள்ளை அறிக்கை பாடி இருக்கிறது..
ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என்று தவெக அரசு சொல்லாமல் சொல்லி உள்ளது.. இதற்கு முந்தைய ஆட்சிகளிலும் தமிழகத்தின் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது..
தொடர்ச்சியாக அனைத்து ஆட்சிகளிலும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. தவெக 5 ஆண்டுகள் முடித்தால், தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும்.. திமுக ஆட்சியில் வாங்கிய கடனை விட குறைவாக கடன் வாங்கினால் நான் என் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்..
திமுக கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி, நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி திறமையான நிதி நிர்வாகத்தை மேற்கொண்டு, நாங்கள் வாங்கிய கடனை விட குறைவாக வாங்கினோம் என்று சொன்னால் என் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.. இதை இந்த தவெக அரசுக்கு சவாலாகவே கூறிக்கொள்ள விரும்புகிறேன்..” என்று தெரிவித்தார்..



