2026 சட்டப்பேரவை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அங்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி வேட்பாளராக களமிறங்கினார்.. இந்த தொகுதியில் தவெக வேட்பாளர் கிரிபிரசாத் வெற்றி பெற்றார்..
இதனிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.. அவரின் இந்த பதிவு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியது.. இதற்கு ஸ்ரீநிதி எதிர்வினையாற்றிய நிலையில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காய்த்ரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்..
இந்த நிலையில் ஸ்ரீநிதி தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஸ்ரீநிதி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்..
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிதி “ 2026 சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டேன்.. இன்று திமுகவில் நான் இணைந்துள்ளேன்.. காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசலால் தொகுதியில் எந்த பணியும் செய்ய முடியவில்லை..
காங்கிரஸ் கட்சியில் கொங்கு மண்டலத்தில் இருந்து பெண் தலைவர்கள் முன்னேறக் கூடாது என்று நினைக்கின்றனர்.. சுயநலத்துக்காக தவெகவிடம் காங்கிரஸ் கட்சியை அடகு வைத்துள்ளனர்.. கவர்ச்சியை நோக்கி செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்த திமுக மிக முக்கியம்..” என்று தெரிவித்தார்..



