தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதல்வர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்த நிலையில், இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது..
இதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.. ஆனால் அதற்கு முன்பே சட்டப்பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
இந்த நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் “ சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று வீரவசனமாக பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாகவே நேரலை ஒளிபரப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் மாதம் ரூ.2500, பயிர்க்கடன் முழு தள்ளுபடி ஆகியவை குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பிய நிலையில் – சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் என ஒருவர் கூட பதிலளிக்கவில்லை.
மேகதாது விவகாரத்திலும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அவர்கள் பேசவில்லை.. இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறாரா? குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து தி.மு.கழக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பிய நிலையில், உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சர் விஜய், வாயைத் திறக்காமல் கம்முன்னு அமர்ந்துள்ளார்.
வெளியே வீராவேசமாக பேசும் முதலமைச்சர் விஜய் அவர்கள் இங்கே பம்மி, பதுங்குவது ஏன்? “பதில் தெரியாதவன் கிட்ட கேள்வி கேட்டா, தேடிப்பிடித்து தப்பாவாவது பதில் சொல்லுவான், எனக்கு கேள்வியே தெரியாதே” என்ற கமல்ஹாசன் அவர்களின் வசனம் தான் உங்களையெல்லாம் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.. நீங்கள் ஒரு DUMMY CM என மக்களுக்குத் தெரியக்கூடாது என்ற பயத்தில் நேரலையை மட்டும் கட் செய்யவில்லை – மக்களின் முன் அம்பலப்பட்டும் நிற்கிறீர்கள் முதலமைச்சர் விஜய்..” என்று தெரிவித்துள்ளது..



