கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.. இதில் நெல்லையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.. இந்த நிலையில் கத்தார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்..
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கத்தார் நாட்டில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தொழிற்சாலைய்ல் கடந்த 21-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தை சேர்ந்த பபித், பணகுடி பகுதி சிவகாமிபுரத்தை சேர்ந்த சஜித்குமார், அழகியநம்பியாபுரத்தை சேர்ந்த சுவின் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தம், வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும்..
உயிரிழந்தவர்களின் உடலை உடனடியாக விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. மேலும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளேன்..
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசின் உதவி எண்கள், இந்தியாவிற்குள் +91 1800 309 3793, வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901″ என்று தெரிவித்துள்ளார்..



