சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்திருந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா, அம்பா சமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.. மேலும் ராஜினாமா செய்த கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்..
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இணைப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சென்னை தலைமை செயலக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்..
தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் தராததால் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிமுக கொள்கைப்பரவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை என 6 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.



