வீடு முழுமையாக சுத்தமாக இல்லாவிட்டாலும், கழிப்பறை சுத்தம் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. சுத்தமில்லாத கழிப்பறைகள் பல்வேறு நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் வீடுகளில் கழிப்பறை சுகாதாரத்தை பராமரிப்பது மிக முக்கியமாகிறது.
ஆனால், கழிப்பறையில் உருவாகும் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற வளையக் கறைகள், சுண்ணாம்பு படிவங்கள் போன்றவை சாதாரண முறைகளில் எளிதில் நீங்காத சவாலாக இருப்பது பலரின் அனுபவமாக உள்ளது. இத்தகைய நிலை, கழிப்பறை சுத்தம் செய்வதை கடினமான பணியாக மாற்றுகிறது.
இருப்பினும், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி இந்தப் பிடிவாதமான கறைகளை திறம்பட அகற்ற முடியும். ஆம், உண்மை தான். முதலில், கழிப்பறை கோப்பையில் உள்ள நீரை குறைக்க வேண்டும். இதற்காக தண்ணீர் வருகையை நிறுத்தி, ஒரு முறை ஃப்ளஷ் செய்து அதிகமான நீரை வெளியேற்றலாம். பின்னர் ஒரு கப் அளவிற்கு வினிகரை டாய்லெட் பிரஷ் மூலம் அனைத்து பகுதிகளிலும் பரவச் செய்ய வேண்டும்.
ஒரு நிமிடம் கழித்து, சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து, மீண்டும் சிறிது வினிகரை ஊற்ற வேண்டும். இவை ஒன்றுடன் ஒன்று சேரும் போது நுரை உருவாகி, கறைகள் மற்றும் படிவங்களை தளர்த்த உதவுகிறது. இந்த கலவையை குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது தேவையெனில் அதற்கு அதிக நேரம் ஊறவிடலாம்.
பின்னர் டாய்லெட் பிரஷ் மூலம் கழிப்பறை கோப்பையை நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பிடிவாதமான கறைகளாக இருந்தால், கடைகளில் கிடைக்கும் பியூமிஸ் கல்லைப் பயன்படுத்தி தேய்க்கலாம். இந்த கல் ஆன்லைனிலும் எளிதாக கிடைக்கும். இதனால் எவ்வளவு கடினமான கரையாக இருந்தாலும் சுலபமாக நீங்கி விடலாம். ஆனால் மேற்பரப்பில் சேதம் ஏற்படாமல் இருக்க கவனமாகவும் மெதுவாகவும் பயன்படுத்துவது அவசியம்.
சுத்தம் செய்த பிறகு மீண்டும் ஃப்ளஷ் செய்து அனைத்து அழுக்குகளையும் வெளியேற்ற வேண்டும். இத்தகைய கறைகள் மீண்டும் உருவாகாமல் இருக்க வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. அவ்வப்போது வினிகரை பயன்படுத்தி பராமரிப்பு செய்தால் சுண்ணாம்பு படிவங்கள் குறையும்.
Also Read: வாஷிங் மெஷின்ல துவச்ச துணி அழுக்கா இருக்கா? காரணம் இது தான்!



