சென்னை பல்லாவரம் பச்சையப்பன் தெருவில் வாடகைக்கு வீடு விடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி, 56 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் பச்சையப்பன் தெருவில், வாடகைக்கு வீடு தேடி புதிய நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அருகருகே வசித்து வந்த இரண்டு வீட்டு உரிமையாளர்களும் தங்களது வீட்டை வாடகைக்கு எடுக்குமாறு அவரிடம் பேசியுள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய்த்தகராறாக இருந்த இந்த பிரச்சினை, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த மோதலின் போது, 56 வயதுடைய முருகேசன் என்பவரை மற்றொரு வீட்டு உரிமையாளர் தாக்கியதுடன், அவரது கை மற்றும் காதில் பற்களால் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் வலியால் அலறியதைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து, முருகேசனை தாக்கி காயப்படுத்திய நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாடகைக்கு வீடு விடுவது தொடர்பாக ஏற்பட்ட போட்டி, கைகலப்பாக மாறி இவ்வாறு வன்முறையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: மதுரையில் கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்; 5 பேர் உயிரிழப்பு!



