பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததற்காக பள்ளி மாணவிகள் கூட தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. காதலை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை, பல நேரங்களில் கொடூரமான வன்முறைகளாக மாறி வருகிறது. அப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரங்கேறியுள்ளது. பிளஸ்-1 மாணவி ஒருவர் வீட்டிலேயே மர்ம நபரின் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரைச் சேர்ந்த 28 வயதான அய்யப்பன் என்பவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை அவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த நாள் காலை, எலக்ட்ரீசியன் பணிக்காக அந்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற அய்யப்பன், வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்தி தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அவரது அத்துமீறிய செயல்களையும் எதிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன், சத்தம் போட்டால் உயிருடன் விடமாட்டேன் என மாணவியை மிரட்டியுள்ளார். இருப்பினும் மாணவி தொடர்ந்து உதவிக்காக சத்தமிட்டதால், கையில் வைத்திருந்த பிளேடால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். பலத்த காயமடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த அய்யப்பன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அய்யப்பனை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: கொடூரத்தின் உச்சம்! 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் காய்ச்சிய கத்தியால் சூடு வைத்த ஆசிரியை!



