தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கும் மகாலட்சுமிக்கும் மிகவும் உகந்த புனித மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதுடன், வீடுகளிலும் பெண்கள் மாவிளக்கேற்றி, விளக்கு பூஜை செய்து, கூழ் வார்த்து அம்மனை வெகுவிமர்சையாக வழிபடுவது வழக்கம். குடும்ப நலன், மன அமைதி மற்றும் செல்வ வளம் பெருக பெண்கள் இச்சடங்குகளைச் செய்து வரும் வேளையில், ஆடி வெள்ளிக்கிழமைகளில் சில குறிப்பிட்ட பொருட்களை வாங்குவதையும், சில செயல்களைச் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்ற ஆன்மீக நம்பிகைகளும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஆடி வெள்ளிக்கிழமையன்று ஊசி, கத்தி, கத்திரிக்கோல் போன்ற கூர்மையான உலோகப் பொருட்களைப் புதிதாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இவை வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. அதேபோல, அம்மன் வழிபாட்டிற்கு மஞ்சள், சிவப்பு போன்ற மங்களகரமான நிறங்களே உகந்தவை என்பதால், அன்றைய தினம் கருப்பு நிற ஆடைகளை அணிவதையும், பழைய பொருட்களை வாங்கி மனைக்குக் கொண்டு வருவதையும் பக்தர்கள் தவிர்க்கின்றனர்.
மேலும், ஆடி வெள்ளிக்கிழமை மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகு உப்பு, தயிர், பால் மற்றும் பணத்தை மற்றவர்களுக்குத் தானமாகவோ அல்லது கடனாகவோ கொடுக்கக் கூடாது என்பதும், இரவு வேளையில் வீட்டைப் பெருக்கிப் பெருக்கிய குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது என்பதும் வழிவழியாகப் பின்பற்றப்படும் பழக்கமாகும். பூஜைக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களை வெள்ளிக்கிழமை அன்றே சுத்தம் செய்யாமல், அதற்கு முந்தைய நாளே சுத்தம் செய்து வைப்பது சிறந்தது என்றும் நம்பப்படுகிறது. இவை அனைத்தும் குடும்பத்தில் மங்களகரமான சூழலையும், நேர்மறை ஆற்றலையும், ஒற்றுமையையும் தக்கவைப்பதற்காகத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கைகளாகும்.
Read More : அதே 3ம் தேதி..!! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த முக.ஸ்டாலின்..!!



