மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. முதல்வர் விஜய்யின் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தாத தகவல்கள் அவ்வப்போது வெளியானது.
இந்நிலையில், மதுரையில் நடிகை த்ரிஷா பெயரில் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த மன்றத்தின் சார்பாக, மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலம் த்ரிஷாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், ‘எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை.
தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா த்ரிஷாவிற்கு தமிழக அரசாங்காத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். அன்பு அக்கா த்ரிஷாவுக்கு வரவேற்பு! மதுரை மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால். அரசியலுக்கு வாருங்கள்!
வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் என்று வாசகத்துடன் வேலுநாச்சியாரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட இலச்சினையும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இத்துடன் வேலு நாச்சியாரின் உடையில் த்ரிஷா இருக்கும் படம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையின் படங்களை இணைத்து முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இது குறித்து நடிகை த்ரிஷா இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.


