கிராமப்புறங்களில் முருங்கை மற்றும் வேப்ப மரங்கள் இல்லாத வீடுகளே இல்லை எனும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் பரப்பப்பட்ட மூடநம்பிக்கைகள் காரணமாக பலர் தங்கள் வீடுகளில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றும் சூழல் உருவானது. குறிப்பாக, முருங்கை மரத்தில் பேய், பிசாசுகள் குடியிருக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம்.
விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனம் உச்சம் தொட்டு வரும் இக்காலகட்டத்திலும், பில்லி சூனியம் மற்றும் பேய் சார்ந்த அச்சங்கள் மனித மனங்களில் தொடரவே செய்கின்றன. விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் ‘வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது’ போன்ற புனைவு கதைகளே பேய், பிசாசு, மோகினி என பல உருவங்களாக உருவகப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை விதைத்தன. உண்மையில், முருங்கை அல்லது புளிய மரம் என எந்தவொரு தாவரத்திலும் பேய் குடியேறுவதில்லை என்பது நிதர்சனம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கை மரத்தை அச்சமின்றி தாராளமாக வீடுகளில் வளர்க்கலாம். இருப்பினும், இம்மரத்தில் கம்பளிப்பூச்சிகள் மற்றும் பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், வீட்டின் ஜன்னல்கள் அல்லது வாசலுக்கு அருகாமையில் வைக்காமல், வேலியோரத்திலோ அல்லது வீட்டிற்கு சற்று தள்ளியோ நட்டு வளர்ப்பது சிறந்தது.
“முருங்கை மரமும் பசுமாடும் இருந்தால் ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, இதன் கீரை மற்றும் காய் உணவாகவும், உடலுக்கு தேவையான சத்துக்களை அளிப்பதாகவும் திகழ்கிறது.
இதேபோல், வேப்ப மரத்தை வீட்டில் வளர்ப்பதிலும் சிலருக்கு சந்தேகங்கள் எழுவதுண்டு. ஆனால், வேப்ப மரம் வீட்டின் காற்றை தூய்மைப்படுத்துவதிலும், கிருமிநாசினியாக செயல்படுவதிலும் ஆற்றல் மிக்கது. அத்துடன், ஆன்மீக முக்கியத்துவமும் கொண்ட வேப்ப மரத்தையும் எந்தவித தயக்கமுமின்றி வீடுகளில் வளர்த்துப் பயன்பெறலாம்.
Read More : தமிழ்நாட்டில் ஆன்லைனில் மது விற்பனையா? உண்மை என்ன? துறை அமைச்சரே கொடுத்த பரபரப்பு தகவல்..!!



